பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை என்ஐஏ அல்லது சிபிஐக்கு மாற்றுமாறு வலியுறுத்தியிருக்கிறார்.
மைக்கேல் பட்டியில் இருக்கும் தூய இருதய மேல்நிலை பள்ளியில் தற்கொலை செய்துகொண்ட 12 ஆம் வகுப்பு மாணவி லாவண்யாவின் மரண வாக்குமூலத்தில் மதமாற்றம் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. தன்னை வார்டன் அதிக வேலை பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தியதால் விஷமருந்தியதாகக் கூறினார். எனவே, வார்டன் சகாய மேரியை கைது செய்தனர்.
ஆனால், இந்துத்துவ அமைப்புகள் மாணவியை மதம் மாற கட்டாயப்படுத்தியதால் தான் தற்கொலை செய்து கொண்டதாக கூறி வருகிறது. இது பற்றி புகார்களும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளரான எச்.ராஜா, இந்து மக்கள் மீது மதமாற்ற தாக்குதல் நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறுகையில் மாணவி லாவண்யா ஆசிரியர் தூண்டுதலால் தான் தற்கொலை செய்திருக்கிறார். மாணவி உயிரிழப்பதற்கு முன்பாக மதம் மாற மறுத்து ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். ஆனால், தஞ்சை மாவட்டத்தின் எஸ்.பி மதமாற்றம் நடைபெற்றதாக தெரியவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
விசாரணை மேற்கொள்வதற்கு முன்பு மதமாற்ற முயற்சி நடக்கவில்லை என்று எவ்வாறு உறுதியாக கூறுகிறார். மதமாற்ற தாக்குதல் என்பது இந்து மக்கள் மீது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த வழக்கு என்.ஐ.ஏ அல்லது சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.