கனடாவில் தொடர்ந்து இரு இடங்களில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய நபரை காவல்துறையினர் சுட்டு கொன்றதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இருக்கும் மிசிசாகா நகரத்தின் ஹோட்டல் ஒன்றில் ஒரு காவல்துறை அதிகாரி சாப்பிட்டுவிட்டு வெளியே சென்றிருக்கிறார். அப்போது, வாகனத்தில் வந்த ஒரு மர்ம நபர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
அதன் பிறகு அங்கிருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அதற்கு முன்பாக அவர் தப்பிவிட்டார். இது மட்டுமல்லாமல் அந்த நபர் மில்டன் நகரத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு சாலையில் சென்று கொண்டிருந்த நபர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
இதனால், மக்கள் பதறியடித்துக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடியிருக்கிறார்கள். ஆனால் அந்த நபர் கண்ணில் பட்ட மக்களை நோக்கி சுட்டு விட்டு தப்பியுள்ளார். இதில் ஒரு நபர் பலியானதோடு மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், தொடர்ந்து இரு இடங்களில் துப்பாக்கி சூடு தாக்கல் மேற்கொண்ட அந்த மர்ம நபரை பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். அதன் பிறகு அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்த அதிகாரிகள், துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார்.