“குரூப் 7 பி” தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் கிட்டத்தட்ட 800 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை 3 பதவிக்கான “குரூப் 7 பி” தேர்வு நேற்று நடைபெற்றுள்ளது. இதில் தேனி மாவட்டத்தில் மட்டும் 6 மையங்களில் தேர்வு நடைபெற்றது. மேலும் காலை பிற்பகல் என இரண்டு நிலைகளில் தேர்வு நடைபெற்றுள்ளது. இந்த தேர்வை எழுத 1662 பேர் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணியளவில் தேர்வு தொடங்கப்பட்டது.
ஆனால் விண்ணப்பித்து தேர்வு எழுத அனுமதி பெற்றவர்களில் பலர் தேர்வு அறைக்கு வரவில்லை. இதனால் தேர்வு மையங்கள் வெறுச்சோடி காணப்பட்டன. மேலும் ஒவ்வொரு அறையிலும் ஒதுக்கீடு செய்யப்பட்ட எண்ணிக்கையை விட குறைவான அளவிலேயே தேர்வு எழுதினர். இந்தத் தேர்வை எழுதியவர்களின் மொத்த எண்ணிக்கை 862 பேர் மட்டுமே. அதாவது அனுமதி பெற்றவர்களில் கிட்டத்தட்ட 800 பேர் தேர்வு எழுத வரவில்லை.
குறிப்பாக தேனியில் உள்ள தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த தேர்வுக்காக 6 முதன்மை கண்காணிப்பாளர்களும் 84 அறை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வினாத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துவரப்பட்டது போலவே தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்கள் எடுத்துச் செல்லப்பட்டன. குறிப்பாக தேர்வு நடைமுறைகள் வீடியோ கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.