கிராம நிர்வாக அலுவலரின் பிறந்தநாளை கேக் வெட்டியும், மரக்கன்றுகள் நட்டும் பொது மக்கள் கொண்டாடினர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள செரியலூர் பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அருள்வேந்தன் என்பவர் கிராம நிர்வாக அதிகாரியாக பதவியேற்றார். அவர் அந்தப் பதவியை ஏற்ற பிறகு கிராமத்தில் உள்ள மக்களுக்கு தாமதிக்காமல் உடனடியாக சான்றிதழ்களை பெற்றுத் தந்துள்ளார். இதனால் அந்த சான்றிதழ்களை பெறுவதற்கு கிராம மக்கள் எளிமையாக அணுக முடிந்தது.
மேலும் கிராமத்திலுள்ள மக்கள் யாரிடமும் சான்றிதழுக்கு லஞ்சம் பெறாமல் வேலைகள் அனைத்தையும் செய்து வந்ததால் பொது மக்கள் மனதில் அருள்வேந்தன் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் அருள்வேந்தனின் பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதி இளைஞர்கள், செரியலூர் இனாம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து கேக் வெட்டியும், மரக்கன்றுகள் நட்டும் சிறப்பாக கொண்டாடினர்.