அடுத்த மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபை முன் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க், டுவிட்டர் சிஇஓ ஜேக் டோர்சி ஆகியோர் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் கூகுள் நிறுவன சிஇஒ சுந்தர் பிச்சையும் ஆஜராகி சாட்சியம் அளிப்பார் என சொல்லப்படுகிறது. ஆனால் இவர்கள் எந்த காரணத்திற்காக பிரதிநிதிகள் சபையில் ஆஜராக உள்ளனர் என்பது குறித்த விவரம் எதுவும் வெளியாகவில்லை. கடந்த அக்டோபர் மாதம் இந்த 3 பேரும் செனட்டின் வர்த்தக நிலைக்குழுவின் முன்பு ஆஜராகினர்.
இந்த நிறுவனத்தின் உள்ளடக்க மாற்றங்கள் குறித்து குடியரசு கட்சி எம்பிக்களும், அதிபர் தேர்தல் குறித்த தவறான தகவல்களை சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனநாயக கட்சி எம்பிக்களும் அவர்களிடம் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.