ஐஐடியில் தங்கி பயின்று வந்த ஜெர்மனி நாட்டு மாணவர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டதால் சென்னை ஐஐடியில் இருந்து வெளியேற்றப்பட்டு ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
சென்னை ஐஐடியில் முதுகலை இயற்பியல் பிரிவில் பயின்றுவந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜேக்கப் லிண்டந்தால் என்ற மாணவர், கடந்த வியாழனன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டார்.
போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், ஜெர்மனியை ஹிட்லர் 1933ஆம் ஆண்டு ஆளத்துவங்கி 1945ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் தோல்வியுற்றதைக் குறிக்கின்ற வகையில் ஆங்கிலத்தில் ’WE HAVE BEEN THERE 1933-1945’ என்று எழுதப்பட்ட பதாகையை தன்னுடைய கையில் ஏந்தியிருந்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை அன்றைய ஹிட்லர் தலைமையிலான ஆட்சியோடு ஒப்பிட்டு மறைமுகமாக அவர் விமர்சித்தது உறுதியானதைத் தொடர்ந்து, அவர் இந்தியாவில் தங்கி பயில்வதற்கான அனுமதியை இந்திய குடியுரிமைத் துறை ரத்து செய்தது. இதனையடுத்து ஜேக்கப் லிண்டென்ந்தால் சென்னை ஐஐடியிலிருந்து வெளியேற்றப்பட்டு ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
ஜெர்மனி – சென்னை ஐஐடிக்கு இடையிலான மாணவர்கள் பரிமாற்ற ஒப்பந்த அடிப்படையில் சென்னை ஐஐடியில் சம்பந்தப்பட்ட மாணவர் முதுகலை இயற்பியல் பயின்று வந்தது குறிப்பிடத்தக்கது. ஓராண்டு கால படிப்பில் இன்னும் 6 மாதகாலப் படிப்பு இருக்கும் நிலையில் மாணவர் ஜெர்மனிக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.