இறால் குட்டை அமைக்க தடை விதிக்கக்கோரி உதவி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கீராநல்லூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடியிருப்புக்கு அருகில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் இறால் குட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதனால் அங்கு வசிக்கும் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதாலும் குடிநீர் உப்பு நீராக மாறி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதாலும் உடனடியாக இறால் குட்டை அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அப்பகுதி கிராம மக்கள் 30 க்கும் மேற்பட்டோர் சீர்காழி உதவி கலெக்டர் நாராயணனிடம் இறால் குட்டை அமைக்க தடை விதிக்க வேண்டும் என மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அப்போது உதவி கலெக்டர் விரைவில் இருதரப்பினரையும் கூட்டி பேச்சுவார்த்தை நடத்தி நல்ல தீர்வு காணப்படும் என்று கூறியதை அடுத்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றுள்ளனர்.