தமிழகத்தில் அரசு துறையில் காலியாக இருக்கும் பணியிடங்கள் அரசு தேர்வாணையம் மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில் தற்போது மீன்வளத்துறையில் காலியாக உள்ள உதவி பணியாளருக்கான விண்ணப்பங்கள் கடந்த அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி முதல் வரவேற்கப்படுகிறது. இந்த வேலைக்கு மீன்வளத் தொழில்நுட்ப டிப்ளமோ, மீன்வள அறிவியல் இளங்கலை, விலங்கியல் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த கீதாப்பிரியா என்பவர் சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பது, நான் பி.டெக் மீன்வள இன்ஜினியரிங் படிப்பை முடித்துள்ளேன்.
என்னைப் போன்று நூற்றுக்கணக்கானோர் இந்த படிப்பை படித்துள்ள நிலையில் மீன்வளத் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள உதவி பணியாளர் பணிகளுக்கு எங்களால் விண்ணப்பிக்க முடியவில்லை. எனவே அப்பணியில் பி.டெக் மீன்வள இன்ஜினியரிங் படிப்பையும் சேர்க்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்தது. அப்போது வழக்கை வழக்கை விசாரித்த நீதிபதி மனுதாரரின் கோரிக்கை நியாயமாக இருப்பதாக கூறினார். மேலும் மீன்வளத் துறையில் உள்ள காலி பணியிடத்திற்கு பிடெக் மீன்வள இன்ஜினியரிங் படிப்பையும் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.