நட்பின் அடிப்படையிலேயே ஸ்டாலினை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்கிறார் 3வது அணி அமைய வாய்ப்பு இல்லை என்று கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலுக்கான 6_ஆம் கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட 7-வது வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகின்றார்.
3_ஆவது அணியை அமைக்கும் முயற்சியை முன்னெடுத்து வரும் சந்திரசேகர் ராவ் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களை சந்தித்து வருகின்றார். கடந்த வாரம் கேரள மாநில முதல்வர் பினராய் விஜயனை சந்தித்த அவர் இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலினை இன்று மாலை 4 மணிக்கு சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பால் மூன்றாம் அணி உருவாகுமா என்று தேசிய அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

இந்நிலையில் ஸ்டாலின் மற்றும் சந்திரசேகராவ் சந்திப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில் , மதுரையில் மீனாட்சி அம்மனை கும்பிட்டதுபோல் ஸ்டாலினையும் கும்பிட செல்கிறார் நட்பின் அடிப்படையிலேயே ஸ்டாலினை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்கிறார் – 3வது அணி அமைய வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார்.