தமிழக முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி ஜெ. ஜெயலலிதாவிற்கு, தனது அம்மா நடனம் கற்றுக்கொடுத்ததாக நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
காயத்ரி ரகுராம் நடிகையாக இருந்து பின் நடன இயக்குநராக அவதாரம் எடுத்தவர். இவர் தற்போது இயக்குநர் ஏல்.எல். விஜய் இயக்கிவரும் ‘தலைவி’ படத்தில் நடன இயக்குநராக பணிபுரிந்து வருகின்றார். முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகின்றது. இதில் ஜெயலலிதா வேடத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துவருகின்றார்.
இந்நிலையில் இப்படத்தில் பணியாற்றுவது குறித்து நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் பிரபல ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார். அதில், “படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே என்னிடம் கங்கனா ரனாவத் முறையாக பரத நாட்டியம் கற்றுக்கொண்டார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அவரது இசையில் ஏற்கனவே நான் ‘மதராசபட்டினம்’ படத்தில் வெளியான, ’பூக்கள் பூக்கும் தருணம்’ பாடலுக்கு நடனம் அமைத்தேன்.
அது மிகவும் சிறப்பாக வந்திருந்தது. அதே போல் இந்தபடமும் சிறப்பாக அமையும் என்று நான் எதிர்பார்க்கிறேன். தலைவி படம் எனது சினிமா வாழ்க்கையில் மறக்கமுடியாத படமாக இருக்கும். ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு எனது அம்மாவும், அப்பாவும் நடனம் கற்றுக்கொடுத்தனர். தற்போது நான் ஜெயலலிதா படத்திற்கு நடனம் அமைக்கிறேன். இப்படத்தில் பணிபுரிவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.