உள்ளூர் லீக் போட்டியில் சக அணி வீரரைத் தாக்கிய வங்கதேச முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைனுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் 5 ஆண்டுகள் விளையாடத் தடை விதித்தது.
வங்கதேச கிரிக்கெட் வாரியம் சார்பில் தேசிய கிரிக்கெட் லீக் போட்டிகள் அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டாக்கா டிவிசன் – குல்னா டிவிசன் அணிகளுக்கிடையிலான ஆட்டம் குல்னாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் டாக்கா மண்டல அணிக்காக விளையாடி வரும் வங்கதேச அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைன், நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தின் போது தனது பந்து வீச்சு குறித்துப் பேசிய, சக அணி வீரரான அராபத் சன்னியை கன்னத்தில் அறைந்தார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த வங்கதேச கிரிக்கெட் வாரியம், ஷகாதத் ஹூசைனுக்கு 5 ஆண்டுகள் விளையாடத் தடையும், 85 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. சக அணி வீரரை அறைந்த வங்கதேச கிரிக்கெட் வீரருக்கு ஐந்து ஆண்டுகள் தடை வழங்கியுள்ள சம்பவம், கிரிக்கெட் வட்டாரங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.