தமிழகத்தில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாளை மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலாகிறது. இதுவரை தமிழகத்தில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறினார். அவர் கூறியதாவது, லண்டனில் இருந்து சென்னை திரும்பிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. அதில் ஒருவர் புரசைவாக்கத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் என்றும், மற்றொருவர் திருப்பூரை சேர்ந்த 48 வயதானவர் என்றும் தெரிவித்தார்.
மேலும் மதுரையை சேர்ந்த 54 வயது நபருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்திற்குள்ளேயே இருந்து கொரோனா பரவிய முதல் நபர் இவர்; இவருக்கு எந்த வெளிநாட்டு தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார்.
அதாவது, இதுவரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள், ஆனால் மதுரையை சேர்ந்த இவருக்கு வெளிநாட்டு தொடர்பும் கிடையாது. தமிழகத்தில் இருந்தவர், ஆகவே தமிழகத்தில் முதல் நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.