சாலையின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டத்திலுள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தந்தை முத்துவீரப்பன் ஏற்கனவே மரணமடைந்துவிட்டார். இந்நிலையில் ரவிச்சந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மறைந்த தந்தை முத்துவீரப்பனின் பட திறப்பு விழாவிற்கு பிளக்ஸ் ஒன்றை வைத்துள்ளார். அந்த வழியாக புதுக்கோட்டை மாவட்டம் கிராமத்தைச் சேர்ந்த விஜயராணி என்பவர் தனது சகோதரர் இறந்த எட்டாவது நாள் நிகழ்வுக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரிடம் லிப்ட் கேட்டுள்ளார்.
அவரும் விஜயராணிக்கு லிப்ட் கொடுத்துள்ளார். இவர்கள் இருவரும் சாலையில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் அருகில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென அது விஜயராணியின் மேல் விழுந்துள்ளது. இதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.