ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் தொடர்புடைய 3 பேரை கைது செய்த போலீசார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள எமனேஸ்வரம் பகுதியில் உள்ள ஜீவா நகரில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் ஹேமலதா என்ற பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இந்நிலையில் அப்பகுதி சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாணிக்கம் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த ரஞ்சித்குமார் மற்றும் ஹேமலதாவை போலீசார் நிறுத்தி விசாரணை செய்ததில் அவர்களிடம் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ரஞ்சித்குமார் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனைத்தொடர்ந்து ஹேமலதாவை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது வீட்டில் 6 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஹேமலதாவின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அவர் பதுக்கி வைத்திருந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கஞ்சா கடத்தலில் தொடர்புடைய ஹேமலதாவின் தந்தை கருப்பையாவையும், ரஞ்சித்குமாரின் தந்தை எபினேசரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தப்பியோடிய ரஞ்சித்தையும் தேடி வருகின்றனர்.