விழுப்புரத்தின் கிழக்கு கடற்கரை சாலையில் துப்பாக்கியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுவதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் அப்பகுதி காவல்துறையினர் கிழக்கு கடற்கரை சாலை ஓரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சிவா என்ற நபரை மர்ம நபர்கள் இரண்டு பேர் வழிமறித்து துப்பாக்கியை காட்டி பணம் பறித்துள்ளனர்.
இதனை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் கண்டதும் அவர்களை விரட்டி மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட கௌதம் மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் வைத்திருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.