இறுதி பருவத் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் அவர்களின் ஊருக்கு அருகாமையில் உள்ள கல்லூரிகளில் எழுத உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலால் கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு தவிர மற்ற தேர்வுகளை ரத்து செய்து, மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆல்பாஸ் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கல்லூரிகளில் பயின்று வரும் இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதி பருவத்தேர்வு செப்.15-ம் தேதி முதல் நடத்தப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இதற்காக, அனைத்து பல்கலைக்கழகங்களும் தேர்வுக்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். மேலும் இந்த பருவத்தேர்வுகளுக்கு நேரில் வர முடியாத வெளிமாநில, வெளிநாட்டு மாணவர்கள் இணைய வழி மூலம் தேர்வெழுதுவதை அனுமதிக்க அரசு ஒப்புதல் கொடுத்திருப்பதாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதே போல இறுதி பருவத் தேர்வுகளை எழுதும் ஒவ்வொரு மாணவர்களும் தேர்வெழுத வசதியாக அவர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகே உள்ள கல்லூரிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் உயர்கல்வித் துறை கூறியுள்ளது.