தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் டிஜிபி ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் பென்னிக்ஸ், அருகிலேயே ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜை போலீசார் திட்டியுள்ளனர். இதனால் போலீசாருக்கும் ஜெயராஜுக்கும் வாக்குவாதம் மூண்டது.
இதனை கண்ட பென்னிக்ஸ் போலீசாருடன் சமாதானம் பேச முயன்ற போது, கைகலப்பு வரை சென்றுள்ளது.
இதையடுத்து, விதி முறைகளை மீறி கடை நடத்தி வந்ததாக கூறி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறை சாலையில் அடைத்தனர். இந்நிலையில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர், சாத்தான்குளத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று 80 சதவீத கடைகள் இன்று அடைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து இன்று விசாரணைக்கு எடுத்தது.
அப்போது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சாத்தான்குள ஆய்வாளர் உள்ளிட்ட பணிநீக்கம் செய்யப்பட்ட 4 காவலர்கள் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டு நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (டிஜிபி), தூத்துக்குடி எஸ்.பி. காணொலி மூலம் மதியம் 12.30 மணிக்கு ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தந்தை, மகன் உயிரிழப்பு சாதாரண விஷயம் அல்ல என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.