இரண்டு அதிவேக படகுகள் மன்னார் வளைகுடாவின் கடல் பகுதியை பலப்படுத்தும் பொருட்டு வரவழைக்கப்பட்டுள்ளன.
ராமேஸ்வரம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, பீடி இலை, கடல் அட்டை போன்ற பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவததால் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி தான் மிக முக்கியமான பகுதியாக கருதப்படுகிறது. இதனைப் போலவே ராமேஸ்வரம் வழியாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து தங்க கட்டி கடத்தப்படுகிறது. இவ்வாறு மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாக நடைபெறும் இந்த கடத்தலைத் தடுப்பதற்காக இந்திய கடற்படை முகாமுக்கு புதிதாக இரண்டு அதிவேக ரோந்து படகுகளை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் படி, மன்னார் வளைகுடா கடல் பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு அந்த அதிவேக படகுகள் வந்து சேர்ந்தன. இந்த இரண்டு படகுகளும் பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து குந்துகால் பகுதியில் உள்ள ஆழ்கடல் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கடற்படை உயர் அதிகாரி கூறும்போது, 10 வீரர்கள் வரை இந்த இரண்டு படகுகளிலும் பயணிக்கலாம் எனவும், இந்த படகானது மணிக்கு சுமார் 60 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கடலில் தொலை தூரத்தில் வரும் படகுகளை அதிவேக படகில் இருந்த படியே அதிநவீன ரேடார் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் கண்காணிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.