சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பப்படுவதை கண்காணிக்க புதிய சட்டம் இயற்றப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சைபர் குற்றங்களை தடுக்க சமூக வலைதளங்கள் உடன் ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி ஆண்டனி கிளமென்ட் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு உயர் நீதிபதிகள் சத்தியநாராயணன் , சேஷசாயி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பகிர தளம் அமைத்துக் கொடுத்து விட்டு அதில் பரப்பப்படும் தகவல்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என கூறுவதை ஏற்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு உலக அளவில் ஒரு சட்டம் இருந்தாலும் இங்கு வரும்போது இந்திய நாட்டின் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். அதே போல் காட்சி ஊடகங்களை கண்காணிக்க கண்காணிப்பு அமைப்பு இருப்பதை போல் சமூக வலைதளங்களை கண்காணிக்க எந்த அமைப்பு இருக்கிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர் சமூக வலைதளங்களை கண்காணிக்க விரைவில் புதிய சட்டம் இயற்றப்படும் என்று தெரிவித்தார்.இதனிடையே தமிழக அரசுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.