திருமணமாகாத பெண்களுக்கு வழங்கப்படும் கல்வித்தொகையை உயர்த்தி பீகார் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திருமணமாகாத பெண்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாக “முக்கியமந்திரி கன்யா உத்தன் யோஜனா” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிப்படிப்பை முடித்த பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் பட்டதாரி பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இதன்மூலம் பெண் குழந்தைகள் திருமணத்தை தடுக்கவும், பெண்களின் கல்வியை மேம்படுத்தவும் இந்த திட்டம் வகுக்கப்பட்டது. இந்நிலையில் 2021 -22 ஆம் நிதி ஆண்டில் இருந்து திருமணமாகாத பெண்களுக்கு கல்வி உதவித் தொகையை அதிகரித்து முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார் .
அதன்படி பள்ளிப்படிப்பை முடித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், பட்டப்படிப்பை முடித்த பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதன் மூலமாக பீகார் மாநிலத்தை சேர்ந்த 1.6 கோடி பெண்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெண்களின் கல்வி தொகை உயர்விற்கு பீகார் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.