கடமானை வேட்டையாடி சமையல் செய்து சாப்பிட்ட 8 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள நெருப்பூர் பதனவாடி காப்பு காட்டில் வன விலங்குகளை வேட்டையாடுவதாக வன அலுவலர் நாயுடுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி பொன்னாகரம் வனச்சரகர் முருகன் தலைமையில் வனத்துறையினர் சக்திவேல், செல்வமுத்து, பழனிச்சாமி போன்றோர் ரகசியமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏமனூர் சாலையில் கோரப்பள்ளம் என்ற இடத்தில் கடமானை வேட்டையாடி ஒரு கும்பல் சமையல் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது வனத்துறையினருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த கும்பலை சேர்ந்த ஒட்டனூர் பண்ணவாடியை சேர்ந்த கோவிந்தராஜ், முத்துச்சாமி, கண்ணையன், மாதையன், முத்துசாமி, பொன்னம்மாள், சின்னத்துரை, சின்ன பொன்னு போன்ற 8 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த சமைக்கப்பட்ட கடமான் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பின் வன அலுவலர் உத்தரவின்படி மானை வேட்டையாடிவர்களிடம் இருந்து தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் 8 பேரிடம் இருந்து மொத்தம் 2 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு வன விலங்குகளை வேட்டையாடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.