ஈரோடு பேருந்து நிலையத்தில் இன்று முதல் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனை தடுப்பதற்காக மாநில அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில் பிற மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாகி விட்டால் நிலைமையைக் கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும் என்பதால், சென்னைக்கு நிகராக மற்ற மாவட்டங்களில் பாதுகாப்பு பணியானது தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஈரோடு பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள காய்கறி சந்தையில் சில்லறை வியாபாரத்திற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்த வியாபாரமும் காலை 7 மணி வரை மட்டுமே நடைபெறும். சனிக்கிழமை அன்று காய்கறி சந்தைக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கான காரணமாக அவர் கூறுகையில், கொரோனா பரவலை தடுப்பதற்காகவும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதாலும், நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்