தமிழகத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான ஆர்.இளங்கோவன் என்பவர் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், தமிழக மாநில வங்கியின் தலைவராகவும் பதவி வகித்தார். இளங்கோவன் வருமானத்திற்கு அதிகமாக ரூ.3,78,31,75 சொத்துக்களை சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு குறித்து இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன் குமார் ஆகியோர் அறங்காவலராக இருக்கும் முசிறியில் உள்ள சுவாமி ஐயப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களின் கட்டிடங்களை மதிப்பீடு செய்யவும், அறக்கட்டளை குறித்த விவரங்களை வழங்க கோரியும் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துணை கண்காணிப்பாளர் தரப்பிலிருந்து ஆகஸ்ட் மாதம் அறக்கட்டளைக்கு நிர்வாக அறங்காவலர் என்ற முறையில் இளங்கோனுக்கு சமன் அனுப்பப்பட்டு இருந்தது. இதனை எதிர்த்து அறக்கட்டளை சார்பில் அறங்காவலர் என்.அருண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அறக்கட்டளை தரப்பில், கடந்து 2006ம் ஆண்டு முதல் செயல்படும் ஒரு பொது அறக்கட்டளையில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் அறக்கட்டளையின் ஆவணங்களை கோருவதும் மதிப்பீடு செய்வதும் சட்ட விரோதம் என்று வாதிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், அறக்கட்டளை நிர்வாகியாக இளங்கோவன் பொறுப்பேற்ற போது 17 இயக்க நிலம் மட்டுமே இருந்தது. அதன் பிறகு 2017 முதல் 2021 ஆம் ஆண்டுக்கு இடையில் 234 ஏக்கர் நிலம் அறக்கட்டளை பேரில் உள்ளதாகவும், அறக்கட்டளை நடத்தும் கல்வி நிலையங்களில் 14,757 சதுர மீட்டர் பரப்பிற்கு புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை ஆய்வு செய்யவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி நிர்மல் குமார், லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் குற்றம் சட்டப்பரவாக சேர்க்கப்பட்டாலும், இல்லாவிட்டாலும் அறக்கட்டளை கட்டிடங்களை மதிப்பீடு செய்வதையும் ஆவணம் கோருவதையும் ஆட்சேபிக்க முடியாது என்றும், புலன் விசாரணையின் போது ஆதாரங்களை சேகரிக்கும் விஷயத்தில் தலையிட முடியாது என்று கூறி அறக்கட்டளைக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்ய கோரி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.