காட்பாடி செல்லும் இரண்டு சக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் போன்றவை கிரீன் சர்க்கிள் வழியாக செல்வதற்கு காவல்துறையினர் தடை விதித்தனர்.
வேலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் கிரீன் சர்க்கிளில் வாகன நெரிசலை குறைப்பதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேலூரில் இருந்து காட்பாடி செல்லும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் கிரீன் சர்க்கிள் வழியாக செல்லாமல் மாற்று வழியில் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பாகாயம், தொரப்பாடி, தோட்டப்பாளையம் போன்ற பகுதிகளிலிருந்து காட்பாடி சாலை, பழைய பைபாஸ் ரோடு வழியாக காட்பாடி செல்லும் இரண்டு சக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் போன்றவை கிரீன் சர்க்கிள் வழியாக செல்வதற்கு காவல்துறையினர் தடை விதித்தனர்.
இதனால் நேஷனல் சிக்னலில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் இடது புறத்தில் செல்லும் சாலை வழியாக சென்னை-பெங்களூர் சர்வீஸ் சாலைக்கு திருப்பி விடப்பட்டது. எனவே சிறிது தூரத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பாலம் வழியாக பெங்களூர்- சென்னை சர்வீஸ் சாலைக்கு சென்று வழக்கம்போல் பாலாற்று புதிய மேம்பாலம் வழியாக காட்பாடிக்கு சென்றன. இதனையடுத்து வேன், லாரி, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம் போல் கிரீன் சர்க்கிள் வழியாக காட்பாடி சென்றுள்ளது. அதன்பின் போக்குவரத்து மாற்றம் குறித்து நேஷனல் சிக்னல் பகுதியில் 3 இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு அந்த பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் நின்று காட்பாடி செல்லும் கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை திருப்பிவிடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் கிரீன் சர்க்கிள் பகுதியில் வழக்கத்தைவிட வாகனங்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.