கிராம உதவியாளர்களாக பணிபுரிவோர்க்கு கல்வித்தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
சட்ட பேரவை கூட்டத்த தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில்,கூட்டத்த தொடரின் கேள்வி நேரத்தில் பேசிய திமுக உறுப்பினர் M.R.K.பன்னீர்செல்வம், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான காலி பணி இடங்கள் எத்தனை உள்ளது, கிராம பணி உதவியாளர்களை கிராம நிர்வாக அலுவலர்களாக பதவி உயர்வு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயக்குமார், அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக கிராம நிர்வாக அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்றும், அதற்கு கால அவகாசம் தேவைபடுகிறதென்றும் குறிப்பிட்டார். தற்போது தமிழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் ஓய்வு பெற்ற 1000 கிராம நிர்வாக அலுவலர்களை மாதம் 15,000 ரூபாய் ஊதியத்தில் பணியமர்த்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் கிராம உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் , கல்வித் தகுதியின் அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்க முடியும் என்று பதிலளித்தார்.