தன்னை பாசமாக வளர்த்தவர் உயிரிழந்ததால் நாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் சுகாதாரத்துறை இணை இயக்குநராக பணியாற்றி வந்தவர் டாக்டர் அனிதா ராஜ் சிங். 12 வருடங்களுக்கு முன்பு இவர் தெருவோரம் ஆதரவின்றி இருந்த நாய்க்குட்டியை தனது வீட்டிற்கு அழைத்து எடுத்து வந்து அதற்கு ஜெயா என்ற பெயர் சூட்டி இத்தனை வருடங்களாக பாசமாக வளர்த்து வந்தார். இதனால் அனிதா மீது ஜெயா என்ற நாய்க்கு பாசம் மிகவும் அதிகம். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அனிதாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து அவரது உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதனை பார்த்து ஜெயா தன்னை வளர்த்தவர் உயிரற்ற நிலையில் இருப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் வீட்டின் மாடிக்கு சென்று கீழே குதித்து தனது உயிரைப் போக்கிக் கொண்டது. இதுகுறித்து அனிதா மகன் தேஜாஸ் கூறுகையில், ஜெயாவை என் அம்மா குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போன்றுதான் கவனித்துக்கொண்டார்.
வீட்டிற்கு அம்மாவின் உடல் கொண்டு வரப்பட்டதும் ஜெயா மாடிக்கு சென்று கீழே குதித்து விட்டாள். இதனால் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்க ஜெயாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் அவள் இறந்து விட்டாள்” என கூறினார். வளர்த்தவர் மரணமடைந்ததால் உயிரை மாய்த்துக்கொண்ட ஜெயா பற்றிய செய்தி அக்கம் பக்கத்தில் மிகவும் வேகமாக பரவியது. ஜெயாவின் உடல் அனிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகிலேயே புதைக்கப்பட்டது.