கொரோனா பரிசோதனையின் போது பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சவுதிஅரேபியாவில் உடலின் வெப்பநிலை அதிகமாக இருந்த காரணத்தால் குழந்தை ஒன்றை அவரின் பெற்றோர்கள் அங்குள்ள ஷாக்ரா பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் குழந்தைக்கு கொரோனா உள்ளதா என்பதை உறுதி செய்ய பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் ஸ்வாப் என்ற மூக்கினுள் விடப்படும் குச்சியைக் குழந்தையின் மூக்கில் விட்டதும் குச்சி உடைந்துள்ளது. இந்தக் குச்சியை வெளியில் எடுப்பதற்காக அக்குழந்தைக்கு மயக்க மருந்தை கொடுத்துள்ளனர். ஆனால், குழந்தையின் சுவாசக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுவிட்டது.
இதன் காரணமாக குழந்தை தனது சுயநினைவை இழந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குப் பின் குழந்தை உயிரிழந்துள்ளது. இது பற்றி குழந்தையின் தந்தை அப்துல்லா அல் ஜவுபான் கூறும்போது , குழந்தைக்கு மயக்க மருந்தைக் கொடுக்க நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை. ஆனால், மருத்துவர்கள் இதை வலியுறுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். அறுவைசிகிச்சைக்கு பின், குழந்தைநல மருத்துவர் குழந்தையைப் பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறினார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் குழந்தை சிறப்பு மருத்துவர் விடுப்பில் இருப்பதாகவும் , சுவாசக் குழாயில் ஏற்பட்ட அடைப்பால் குழந்தை சுயநினைவை இழந்துள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்ததாக அவர் தெரிவித்தார்.
குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைவதாக உணர்ந்த அவர் குழந்தையை சிறப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கேட்டுள்ளார். ஆனால் அனுமதி கிடைத்தும், ஆம்புலன்ஸ் வருவதற்கு காலதாமதமாகியுள்ளது. இதற்கிடையே, குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். குழந்தையின் மரணம் மற்றும் சூழ்நிலையை தவறாக கையாண்டது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள குழந்தையின் தந்தை வழக்கு பதிவு செய்துள்ளதன் மூலம் விசாரணை செய்ய சுகாதாரத்துறை அமைச்சர் குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.