திமுக, கூட்டணி கட்சிகளின் சார்பில் CAA-க்கு எதிரான பேரணியில் 110 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நடத்தும் பேரணிக்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. பேரணிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தடையை மீறி நடைபெற்றால் அதை வீடியோ பதிவு எடுக்க வேண்டும் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் பேரணி சென்னை தாளமுத்து நடராஜன் மாளிகையிலிருந்து தொடங்கியது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த பேரணியில் கி.வீரமணி, வைகோ, திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் ப.சிதம்பரம் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் எல்.பி.எஃப், சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் உட்பட பல்வேறு அமைப்பினரும் பங்கேற்றனர்.
பேரணியின் போது ”மதச்சார்பற்ற இந்தியாவை இந்து தேசமாக மாற்றாதே! குடியுரிமை சட்டம் குழிபறிக்கும் சட்டம்!” ஆகிய முழக்கங்களுடன் திமுக பேரணி நடைபெற்றது. ஏராளமானோர் முழக்கங்களை எழுப்பினர். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் தோழமைக்கட்சிகள் பேரணி நடத்தும் நிலையில் எழும்பூர் ஆதித்தனார் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. எழும்பூரில் இருந்து புதுப்பேட்டை செல்லும் வழியில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
பேரணியின் போது எழும்பூர் காந்தி இர்வின் சாலை, எழும்பூர் – பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் சென்ட்ரல் அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இறுதியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் தோழமைக்கட்சிகள் நடத்திய பேரணி எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவடைந்தது.
இதனிடையே திமுக, கூட்டணி கட்சிகளின் சார்பில் CAA-க்கு எதிரான இந்த பேரணி 110 கேமராக்கள், 4 ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளது. முக்கிய சந்திப்பு மாடிகள் இருந்து போலீசார் 110 கேமரா மூலம் காட்சிகளை பதிவு செய்து கண்காணித்தனர். எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் 5000 போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் 40 சிசிடிவி கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.