தேசிய கொடியை அவமதித்த வழக்கில் நடிகர் எஸ்வி சேகர் காவல்துறையில் சரணடைந்துள்ளார்.
தேசியக் கொடியை அவமதித்ததாக நடிகர் எஸ்வி சேகர் மீது, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ ரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி. சேகர், தேசியக் கொடியை அவமதித்தும், தமிழ்நாடு முதலமைச்சரின் பெயருக்கு அவதூறு விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். எனவே அவர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு எழுதி இருந்தார்.
இப்புகாரின் அடிப்படையில், தேசியச் சின்னங்கள் அவமதிப்புத் தடுப்புச் சட்டம் பிரிவு இரண்டின் கீழ் எஸ்.வி. சேகர் மீது மத்தியக் குற்றப்பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர். இதனால் இவ்வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்து விடுவார்கள் என நினைத்து, முன் ஜாமீன் கேட்டு எஸ்.வி. சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் எஸ்.வி. சேகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு தாமாகவே வந்து சேர்ந்தார். அவரிடம் நான்கு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.