கோயம்பேட்டை காப்பாற்ற இயலாத அரசு டாஸ்மாக்கை திறக்குமாம் என தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அழித்துள்ளது குறித்து கமலஹாசன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. தமிழகத்தில் 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் ர் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதுகுறித்த அறிவிப்பில், மதுக்கடைகளுக்கு தமிழக எல்லைப்பகுதியில் உள்ள மக்கள் அதிக அளவில் செல்வதால், மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. எனவே வருகிற 7ம் தேதி முதல் சில நிபந்தனைகளுடன் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது. எனினும் மதுக்கடை பார்கள், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுபான கடைகள் திறக்கப்படமாட்டாது என உத்தரவிட்டுள்ளது.
கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம்.
அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு.— Kamal Haasan (@ikamalhaasan) May 5, 2020
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அரசு மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள கமலஹாசன், “கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப்படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு! ” என குறிப்பிட்டுள்ளார்.