முகக் கவசம் அணியாமல் தேவையின்றி வெளியே சுற்றி திரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் அதிகாரிகள் கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அதிரடியாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் முகக் கவசம் அணியாத பொதுமக்களுக்கு 200 ரூபாய் அபதாரம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனை அடுத்து தேவையின்றி இருசக்கர வாகனத்தில் வெளியே சுற்றி திரிந்தவர்களுக்கு அதிகாரிகள் கட்டாய கொரோனா பரிசோதனையும் செய்துள்ளனர்.
இதற்காக சேலம் மணக்காடு காமராஜர் மேல்நிலைப்பள்ளி அருகில் இருக்கும் இடங்களில் ஆட்டோக்களில் மாநகராட்சி ஊழியர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர். அப்போது அப்பகுதியில் இருசக்கர வாகனங்களில் தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிந்தவர்களுக்கு அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். இவ்வாறாக 20 – க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை ஒரே நேரத்தில் செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு நிலவியது. இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, பொதுமக்கள் அனைவரும் வீட்டிலிருந்து வெளியில் செல்லும்போது முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுருத்தியுள்ளனர்.