ஆயுத கொள்முதலை நிறுத்திவைக்குமாறு முப்படைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21700 ஆக அதிகரித்துள்ளது.அதில், தற்போது 16689 நோயாளிகள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 4,325 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் 686 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நாடு முழுவதும் ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மே 3ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு கோடிக்கணக்கில் செலவு செய்தி வருவதால் சிக்கன நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு 2021ம் ஆண்டு, ஜூலை வரையிலும் வழங்கப்படாது என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. அது வரையிலும் தற்போது வழங்கப்பட்டு வரும் 17 சதவிகித அகவிலைப்படி எந்த மாற்றமுமின்றி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆயுத கொள்முதலை நிறுத்திவைக்க முப்படைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உள்ளவரை, ஆயுத கொள்முதலை நிறுத்தி வைக்கும்படி தெரிவித்துள்ளது