மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 147ஆக அதிகரித்துள்ளது.
சீனா தொடங்கி உலகையே சின்னாபின்னமாக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்வது மக்களை வேதனையடைய வைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 46 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட எண்ணிக்கையும் 750யை நெருங்கி சென்று கொண்டு இருக்கும் நிலையில் கொரோனா அதிகமாக பாதித்த மாநிலமாக கேரளா, மகாராஷ்டிரா இருந்து வருகின்றது. மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 147ஆக இருந்த நிலையில் அதைவிட குறைவாக இருந்த கேரளாவில் தற்போது மேலும் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் மேலும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் கேரளாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 176ஆக அதிகரித்துள்ளது. அதே போல கர்நாடகாவில் 55 பேருக்கும் , ராஜஸ்தானில் 46 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.