ஓய்வு பெற்ற மில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரம் பங்கஜா மில் சாலையில் வடிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள மில்லில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த சில நாட்களாகவே வடிவேல் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற பிறகும் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வடிவேல் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த வடிவேலை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வடிவேல் பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.