பொன்பரப்பியில் நடைபெற்ற வன்முறை தாக்குதலை கண்டித்து அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது
பொன்பரப்பியில் நடைபெற்ற சம்பவத்தை கண்டித்து அரியலூரில் நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக காங்கிரஸ் SC துறை தலைவர் செல்வபெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த சில மணிநேரங்களில் பொன்பரப்பி கிராமத்தில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டு தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டன.இந்த தாக்குதலில் பலரும் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலை கண்டித்தும், தாக்குதல் நடத்திய வன்முறையாளர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பும், இழப்பீடும் வழங்கபட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாளை மாலை காங்கிரஸ் கட்சி சார்பில் அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.