திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அர்ச்சகராக இருக்கக்கூடிய சீதாராமன் உயர்நீதிமன்ற மதுரை கிளை பொதுநல மனுதாக்கல் ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கோவில்களில் சிலைகளை பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களினால் புகைப்படங்கள் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சில கோயில்களில் சிலைகள் திருட்டு போன்ற சம்பவங்களும் நடந்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறாக செல்போன்களை பயன்படுத்தி சாமிக்கு அபிஷேகம் செய்வது, மேலும் அங்குள்ள சிலைகள் முன்பு நின்று செல்பி எடுப்பது போன்ற சில சட்டத்திற்கு விரோதமான செயல்கள் நடைபெறுகின்றது. எனவே திருச்செந்தூர் கோயில்களில் உள்ளே செல்போன்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என தன்னுடைய மனுவில் கூறியிருந்தார்.
கோவில் என்ன சத்திரமா ?
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயணன் பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கோவிலில் உள்ளே அர்ச்சகர்களே புகைப்படங்கள் எடுத்து அவர்களுடைய தனிப்பட்ட youtube சேனலில் பதிவிடுகிறார்கள். இது ஏற்கத்தக்கது அல்ல என தெரிவித்தனர். தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் சத்திரமா ? என்ற கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கின்ற ஒரு நிலை இருப்பதாகவும், தங்களுடைய கருத்தை பதிவு செய்தனர்.
கோவிலில் நாகரிகமான உடை:
திருப்பதி கோயிலினுடைய வாசலில் கூட புகைப்படங்கள் எடுக்க முடியாது. தமிழ்நாட்டில் தான் தமிழ்நாட்டில் சாமி சிலைகள் முன்னாள் நின்று செல்பி எடுத்துக் கொள்கின்றனர். கோவில்கள் ஒன்றும் சுற்றுலா தளங்கள் அல்ல என்று தங்களுடைய கருத்தினை பதிவு செய்தனர். கோவிலுக்கு வருபவர்கள் நாகரிகமான உடைகளை அணிய முடியாததை பார்க்க வேதனையாக உள்ளது.கோயிலுக்குள் ஜீன்ஸ், டீ சர்ட், ஜாக்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவித்திருந்தனர்.
செல்போனுக்கு அனுமதி இல்லை:
திருச்செந்தூர் கோவிலில் உள்ளே செல்போன் பயன்பாட்டுக்கு உடனடியாக தடை விதிக்க இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். தொடர்ந்து திருச்செந்தூர் கோயில்களில் உள்ளே அர்ச்சகர் உட்பட யாருக்கும் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது. திருச்செந்தூர் கோயிலில் உள்ளே செல்போன் பயன்படுத்தினால் அதனை பறிமுதல் செய்து மீண்டும் ஒப்படைக்க கூடாது என்றும் தெரிவித்தனர்.
இரும்பு கரம் கொண்டு ஒடுக்கணும்:
தொடர்ந்து கோவிலின் வாசலிலேயே செல்போன் டிடெக்டர் வைத்து பரிசோதனை செய்து, அனைவரையும் உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும். கோவில்களில் உள்ள செல்போன் கொண்டு செல்வது, செல்பி எடுப்பது போன்ற செயல்களை இரும்பு கரங்கள் கொண்டு அடக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
குறிப்பிட்டுள்ள உத்தரவுகளை உடனடியாக நிறைவேற்றுவது குறித்த சுற்றறிக்கையை அறநிலையத்துறை ஆணையர்கள் அனுப்ப வேண்டும். இந்த சுற்றறிக்கை நகலை இந்து அறநிலையத்துறை ஆணையர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்ள வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.