நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி தாங்கினார். இந்த கூட்டத்தில் வருகிற 2024-ஆம் ஆண்டு தேர்தலை எப்படி எதிர்கொள்வது? அதிமுக கட்சியினர் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன என்பது குறித்து முதலில் விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு முன்னாள் அமைச்சர் தங்கமணி கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, கடந்த சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ்-ஐ எடப்பாடி பழனிச்சாமி வேறு வழியில்லாமல் தான் நிறுத்தினார். ஓபிஎஸ் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலும் முரண்டு பிடித்தார்.
அதோடு மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலிலும் பிரச்சனை செய்தார். அவரிடம் ஒற்றை தலைமை குறித்து பலமுறை விவாதித்தோம். அதுமட்டுமின்றி ஓபிஎஸ்-க்கு மரியாதை குறைவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவருக்கு இணை பொது செயலாளர் பதவியை வழங்குவதற்கும் அண்ணன் எடப்பாட யார் முன் வந்தார். அதுமட்டுமின்றி ஓ. பன்னீர்செல்வத்தின் மகனுக்கும் அமைச்சர் பதவியை கொடுப்பதற்கும் முடிவு செய்தோம். ஆனால் ஏற்க மறுத்து விட்டனர். நாங்கள் பலமுறை ஓபிஎஸ்-ஐ தனியாக சந்தித்து பேச திட்டமிட்டோம்.
ஆனால் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகரன் ஆகியோர் எப்போதும் உடன் இருந்ததால் எங்களால் தனியாக பேச முடியவில்லை. இவர்கள் அதிமுக ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். கடைசி கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்ற போது வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதனை தாக்க முயற்சி செய்தார். அதிமுக கட்சி பிளவுபட வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணம். அதை தற்போது நிறைவேற்றியும் விட்டார். இதன் காரணமாகத்தான் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்து விட்டோம். திமுகவை எதிர்க்க வேண்டியவர்களே, புகழ தொடங்கி விட்டார்கள்.
தென் மாவட்டங்களுக்கு வந்து பாருங்கள் என ஓபிஎஸ் தரப்பினர் சவால் விட்டதால், அண்ணன் எடப்பாடியார் சிங்கம் போல் தென் மாவட்டத்திற்கு சென்று வந்தார். அதன் பிறகு தற்போது ஆட்சி செய்யும் அரசால் 100 யூனிட் மின்சாரம் என்பது விரைவில் இல்லாமல் போய்விடும் என்பது போல் இருக்கிறது. 35 லட்சம் பேருக்கு வழங்கப்பட்ட முதியோர் உதவித்தொகை தற்போது 25 லட்சம் பேருக்கு தான் வழங்கப்படுகிறது. 10 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகையை வழங்குவதில்லை. இதையெல்லாம் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மேலும் திமுகவினருக்கு விரைவில் நல்லவிதமான தண்டனை கிடைக்கும் என்று கூறினார்.