குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெறும் நிலையில், மத்திய அரசின் உத்தரவால் டெல்லியில் சில பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை மற்றும் மாநிலங்களவை இரு அவைகளிலும் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் வடகிழக்கு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இப்போராட்டத்தில் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட, பல மாணவர்கள் காயமடைந்தனர்.
அதை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவர்கள் தாக்குதலை கண்டித்தும் கல்லூரி மாணவர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மசோதாவுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகளும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தற்போது போராட்டம் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. கர்நாடகா, பெங்களூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல கலவரமாக காட்சியளிக்கும் டெல்லி செங்கோட்டையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் டெல்லியில் சில இடங்களில் செல்போன் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை ஏற்று சில பகுதிகளில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். செல்போன் அழைப்பு வசதி, எஸ்எம்எஸ், இன்டர்நெட் சேவையை நிறுத்தப்போவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. செங்கோட்டை பகுதியில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் தற்போது செல்போன் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.