முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இந்த ஆண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருந்ததால், விளையாட்டுப் போட்டிகளில் குறைந்த அளவிலேயே வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன. இதன் ஒரு பகுதியாக அரியலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் 25 வயதுக்குட்பட்ட அனைவரும் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இந்த ஆண்டு ஆன் லைன் மூலம் கொடுக்கப்பட்டது.
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஓட்டப்பந்தயம், தடகளப் போட்டிகள், நீளம் தாண்டுதல், ஜூடோ, குத்துச்சண்டை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இந்த ஆண்டு முதல் கலந்துகொள்ளும் வீரர்கள் தங்களது பெயர் பற்றிய விவரங்களை ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டியுள்ளதால், மாணவர்கள் பெருமளவில் கலந்துகொள்ளவில்லை. இதனால் போட்டிகளில் குறைவான மாணவ, மாணவிகளே கலந்துகொண்டனர். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெறும் வீரர், வீரர்கனைகள் அடுத்ததாக மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.