21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல, உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக மக்களிடம் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன். கொரோனாவுக்கு எதிராக போராடி தமிழகத்தையும் தமிழக மக்களையும் பாதுகாக்க உறுதியேற்போம். மருத்துவர்களின் உதவியின்றி சுய மருத்துவம் செய்ய வேண்டாம். கொரோனாவுக்கு எதிராக போராட விழித்திரு… விலகியிரு… வீட்டிலிரு.. பொறுப்பான குடிமக்களாக இருந்து சமூதாயத்தை காப்போம் என்றார்.
மேலும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும், மக்கள் அச்சப்பட வேண்டாம். சமூக விலகலை கடைபிடியுங்கள். ஏப்ரல் மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். அரிசி, பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல, உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு. கொரோனா காட்டுத் தீ போல பரவுகிறது. கொரோனாவை விரட்டியடிக்க உறுதி ஏற்போம்.” என்றார்.