மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் நாளை மறுநாள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த இருக்கிறார்.
தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 17,728ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,640ஆக உள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 127ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது.
எனினும் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் வரும் வெள்ளிக்கிழமை (29-05-2020) அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியள்ளது. மேலும் அந்தந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் கொரோனா பரவாமல் இருக்க மேற்கொள்ளப்படும் தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
ஊரடங்கை விலக்கலாமா? அல்லது மேலும் சில தளர்வுகள் அளித்து ஊரடங்கை நீட்டிக்கலாமா? என்பது குறித்து நேற்று காலை மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமிஆலோசனை நடத்தினார். அதில் கொரோனா கட்டுக்குள் வரும் வரை சென்னைக்கு ஊரடங்கில் எந்த தளர்வுகளும் வழங்க கூடாது என மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. அதேபோல தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்திற்கும் அனுமதி வழங்க கூடாது என தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.