குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் விடிய விடிய போராட்டம் நடத்திய நிலையில் பல்கலைகழகத்திற்கு டிசம்பர் 23-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்திய டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு நாடுமுழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டகளத்தில் குதித்துள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் விடிய விடிய போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த பிற கல்லூரி மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதை தட்டிகேட்டதால் கைது செய்யப்பட்டதாக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தங்களது போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் கூறினர்.
இதற்கிடையே பல்கலைகழகத்திற்கு டிசம்பர் 23ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.