Categories
மாநில செய்திகள்

சாத்தான்குளம் காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது – நீதிபதிகள் தகவல்!

தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை, மகனாகிய ஜெயராஜ், பென்னிக்ஸ் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறை சாலையில் அடைத்தனர். இந்நிலையில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சாத்தான்குளம் காவல்நிலையத்தை தூத்துக்குடி ஆட்சியர் கட்டுபாட்டில் கொண்டுவர வேண்டும் என நேற்று உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில் தந்தை, மகன் உடலில் மோசமான காயங்கள் இருப்பதால் சாத்தான்குளம் காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மாஜிஸ்திரேட்டை காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் காவலர்கள் அவமதித்தது அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார். அதற்கு மாஜிஸ்திரேட்டிடம் மன அழுத்தத்தில் காவலர்கள் தவறு செய்துவிட்டனர் என் அரசு தரப்பில் விளக்கம் அளித்து நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிபிஐ விசாரணை தொடங்கும்வரை நெல்லை டிஐஜி அல்லது சிபிசிஐடி விசாரிக்க இயலுமா? என்பது குறித்து மதியம் 12 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். நீதி கிடைக்கும் என ஜெயராஜ் குடும்பத்தினர் நம்புகின்றனர், எனவே ஒரு நொடிகூட வீணாகக் கூடாது என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |