ஊரடங்கை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் வரும் புதன்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இம்மானுவேல் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு அறிவித்து மார்ச் 24ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கை 5ம் கட்டமாக ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு காரணமாக பலர் வருவாய் இழந்து வறுமையில் வாடியுள்ளனர். குறிப்பாக குறைந்த வருவாய் பெறுபவர்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் இதை வைரஸ் பரவல் தடுக்க சீனா, இத்தாலி போன்ற நாடுகள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. ஆனால் தென்கொரியா, ஸ்வீடன் போன்ற நாடுகள் முழு ஊரடனாகை அறிவிக்காமல் அதேசமயம் வைரஸ் தொற்று பரவாமல் தடுத்துள்ளது. இந்த வைரஸ் தொடர்பாக இரு விதமான நடவடிக்கைகளை பல நாடுகள் எடுத்து வருகின்றன.
மேலும், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை வைரஸ் நம்முடன் தான் இருக்கும் எனவும், ஒருவருக்கொருவர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், முகக்கவசம் அணிய வேண்டும் போன்ற நிபந்தனைகள் அரசு விதித்துள்ளது. மேலும், இதனை கடைபிடித்தால் தான் வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்கலாம் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
ஆனால் தற்போது வருவாய் இல்லாமல் வாடும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே இது தொடர்பான வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து வழக்கை விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர்.
அப்போது வாதிட்ட மனுதாரர் வழக்கறிஞர், எந்தஒரு விதியையும் பின்பற்றாமல் ஊரடங்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் ஏற்கனவே இதுபோன்ற வழக்குகள் தொடரப்பட்டு அவை தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வரும் புதன்கிழமை அன்று விரிவான விசாரணை நடத்திய பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.