தமிழகத்தில் ஆகஸ்ட் 15 வரை செயல்பட்டுவந்த சிறப்பு ரயில்கள் பயணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை 6 கட்ட நிலையில் ஊரடங்கு அமலில் இருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, போக்குவரத்தை கட்டுப்படுத்த தெற்கு ரயில்வே துறையிடம் ரயில் பயணத்தை ரத்து செய்யுமாறு தமிழக அரசு கோரிக்கை வைத்தது.
தற்போது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 15 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, திருச்சி – செங்கல்பட்டு, மதுரை – விழுப்புரம், அரக்கோணம் – கோவை, கோவை – மயிலாடுதுறை, திருச்சி – நாகர்கோவில், கோவை – காட்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயங்கி வந்த சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.