குளித்துக்கொண்டிருந்த போது அண்ணன் – தங்கை இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தணி கிராமத்தில் குமார் – சங்கரி தம்பதிகள் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு தினேஷ் என்ற மகனும், சத்யஸ்ரீ என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் ஆசூர் கிராமத்தில் சங்கரியின் பெரியம்மாவான பெரியநாயகி என்பவர் உடல்நலக் குறைவினால் உயிரிழந்துவிட்டார். இதனை அடுத்து சங்கரின் குடும்பத்தினர் ஆசூர் கிராமத்திற்கு சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து தினேஷ் மற்றும் சத்யஸ்ரீ இருவரும் அப்பகுதியில் இருக்கும் சிறுவர்களுடன் பெற்றோருக்கு தெரியாமல் கிணற்றில் குளிக்க சென்றுள்ளனர்.
அதன் பிறகு தினேஷ் மற்றும் சத்யஸ்ரீக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைப் பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் இரண்டு குழந்தைகளையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தினேஷ் மற்றும் சத்யஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.