மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்தை மீட்க 17 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார்.இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுஜித்தை மீட்க தீயணைப்புப் படையினர் 17 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கக் கோரி ட்விட்டரில் #savesujith என்ற ஹாஷ்டேக் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.குழந்தையை பத்திரமாக மீட்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் #PrayForSujith ஹாஷ் டேக்கில் ட்வீட் செய்து வருகின்றனர். தொடர்ந்து குழந்தை சுஜித்தை மீட்க பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் குழந்தை சுஜித் அசைவின்றி இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
குழந்தை மேல் மண் விழுந்துள்ளதால் மண்ணை அகற்றும் பணி தற்போது நடந்து வருகின்றது. 70 அடிக்கு கீழ் குழந்தை சுஜித் இருப்பதால் சுஜித்தை எப்படியாவது மீட்கவேண்டுமென்று தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்.