தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 6ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சமூக விலகல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளுடன் டாஸ்மாக் கடைகள் செயல்படலாம் என நிபந்தனையுடன் அனுமதித்தது. இதனால் தமிழக அரசு அறிவித்தபடி சென்னையை தவிர 7ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. மே 7 மற்றும் 8ம் தேதி கடைகள் திறந்திருந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் ரூ.294 கோடிக்கு மது விற்பனையாகிருந்தது.
இதன் சூழலில் மதுக்கடைகள் திறக்க அனுமதி அளித்ததற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்படிருந்தது. மேலும் சில வழக்கறிஞர்களும் வழக்கு தொடர்ந்திருந்தனர். கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் சூழலில் டாஸ்மாக் கடைகளை திறந்திருப்பது முறையல்ல என்றும் அங்கு சமூக விலகலை கடைபிடிக்க வில்லை என்பது குறித்த ஆதார புகைப்படங்களையும் சம்பர்ப்பித்தனர். இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டதால் தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடையும் வரை டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படுமா? இல்லையா? என்பது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனிமனித இடைவெளியைக் கடைபிடித்தே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்றும் டாஸ்மாக்கை திறப்பது என்பது அரசின் கொள்கை முடிவு, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.