தமிழகத்தில் முக்கிய தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது.நாடு முழுவதும் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போதும் சில தொழில்களுக்கு அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுகுறித்து மாநில அரசுகள் முடிவு எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து முடிவு எடுக்க குழு அமைத்து ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த நிலையில், தொழிலதிபர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார். தலைமை செயலகத்தில் இருந்து தொழிலதிபர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி நடத்திய ஆலோசனையில் தமிழகத்தில் சில தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் முக்கிய தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் சுத்திகரிப்பு நிலையங்கள், இரும்பு, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்ட ரசாயன ஆலைகள், கரும்பு, உர கண்ணாடி, டயர், மிகப்பெரிய காகித ஆலைகள் ஆகியவை தொடர்ந்து இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தொழிற்சாலைகளில் குறைந்த பணியாளர்களை கொண்டு பராமரிப்பு பணி மற்றும் முக்கிய பிரிவுகள் இயங்கலாம் என கூறப்பட்டுள்ளது.