அதிமுகவில் தொடரும் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஓ பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகம் வந்துள்ளார். அப்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இரு பிரிவாக பிரிந்து முழக்கமிட்டனர். அதில் ஒரு பிரிவினர் ஓபிஎஸ் தலைமை ஏற்கவேண்டும் என்றும், மற்றொரு பிரிவினர் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வரும்பொழுது அண்ணன் டிஜே அண்ணன் டிஜே என்று இபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷமிட்டதால் இரு பிரிவினருக்கும் இடையே தள்ளு முள்ளு மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வரும் நிலையில், வெளியில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தொண்டர்கள் ஒருவரையொருவர் கைகலப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதலில் ஈபிஎஸ் ஆதரவாளரான பெரம்பூர் மாரிமுத்து பகுதி செயலாளர் காயமடைந்து வாயில் ரத்தம் வழிய சட்டையில் ரத்தக்கறையுடன் வெளியில் வந்தார். மேலும், எடப்பாடி ஆளா? என்று கேட்டு தன் மீது தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அதிமுகவில் இப்படி நடைபெற்று வரும் ஒற்றை தலைமை போட்டி தான் இந்த வார அரசியல் ஹாட் டாபிக் ஆக உள்ளது. இந்த பரபரப்பான சூழலில் எடப்பாடி, ஓ பன்னீர்செல்வம் தங்கள் ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் ஆதரவு நடத்தி வருகின்றனர். மொத்தம் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 64 பேர் எடப்பாடியின் பக்கம் இருப்பதாகவும், வெறும் 11 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஓ பன்னீர்செல்வம் பக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.